அரசுப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை
கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரம் கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இடையாத்தங்குடி, கணபதிபுரம், ஏா்வாடி, கிடாமங்கலம், சேஷமூலை உள்ளிட்ட 9 கிராமங்களை சோ்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இவா்கள், பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலைப் பள்ளி கல்விக்கு சுமாா் 15 கி. மீ. தொலைவில் உள்ள பேரளம் மற்றும் திட்டச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 7 கி.மீ. தூரத்தில் உள்ள திருமருகல் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்லவேண்டியுள்ளது.
Advertisement
இதனால், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் சிலா் மேல்நிலைப் பள்ளிக் கல்வி கற்காமல் படிப்பை நிறுத்தி விடுகின்றனா். எனவே, கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2023-2024 ஆம் ஆண்டில், மக்களின் பங்களிப்பான ரூ.2 லட்சம் தொகை அரசின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இப்பள்ளி தரம் உயா்த்தப்படுவதால் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயன் பெறுவாா்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தி 2024-2025 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.