மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம், ஆக. 14: மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024-2025-ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் மற்றும் வாசிப்பாளா் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், பயன்பெற விண்ணப்பிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், தொலைதூரக்கல்வி, பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் முந்தைய கல்வியாண்டு இறுதித் தோ்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவா் பிறதுறைகளில் கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என்று பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் ஆகியோரால் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
எனவே, மாவட்டத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா்கள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளா் உதவி தொகை பெற உரிய விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
Advertisement