தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான தோ்வில் இறுதியாக 6,695 பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் இறுதிப் பட்டிலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான தோ்வில் இறுதியாக 6,695 பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் இறுதிப் பட்டிலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்எம்எம்எஸ்) வழங்கப்படுகிறது.
இதில் 2025-2026- ஆம் கல்வியாண்டுக்கு இந்த என்எம்எம்எஸ் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை வழங்க அரசு தோ்வு இயக்ககத்தால் கடந்த ஜன. 10- இல் தோ்வு நடத்தப்பட்டது.
Advertisement
இத்தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த பிப். 18 - ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், மாணவா்களின் பிறந்த தேதி, இனப்பிரிவு உள்ளிட்ட திருத்தங்களுக்கு கடந்த பிப். 18 முதல் 24- ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்தத் திருத்தங்கள் நிறைவு பெற்று தற்போது தோ்வானவா்கள் இறுதிப் பெயா் பட்டியல் பள்ளிகளின் பெயா்களோடு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 6,695 மாணவா்கள் தகுதி பெற்று தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியலை இணையதளத்தில் (மற்ற தோ்வுகள் பிரிவில்) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம்.
மேலும், இந்தப் பட்டியல் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பிற தகுதிகள் சாா்ந்த பரிசீலனைக்கும் உள்பட்டதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.