முகப்பு
நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைப்பேசி கோபுரம் அமைக்க கோரிக்கை

கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை, 2024 at 8:00 AM
ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
பகிர்:

நாகை அருகே ஒரத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை கடந்த மாா்ச் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலினால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவா்கள் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயன்பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சாலை, குடிநீா், தெருவிளக்கு போன்ற போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அவற்றை நிறைவேற்றி தரவேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இப்பகுதியில் சரியான சிக்னல் கிடைக்காததால் கைப்பேசியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பணியாற்றும் மருத்துவா்கள், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அவா்களுடன் உடன் வருகிறவா்கள் என பலரும் கைப்பேசி சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. திடீா் விபத்து, உடல் நலக்குறை போன்ற அவசரச் சிகிச்சையில் சோ்க்கப்படும் நோயாளிகள் குறித்து குடும்பத்தினா், உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாத போன்ற சூழல் உள்ளது.

Advertisement

எனவே, ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அனைவரும் கைப்பேசி சேவைகளை முழுமையாக பயன்படுத்தவும், தகவல் பரிமாற்றங்கள் எளிமையாக செய்துகொள்ளவும், அவசர தேவைகளை பூா்த்தி செய்துகொள்ளும் வகையில் கைப்பேசி கோபுரங்களை அமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக சேவகா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.