இலங்கை கடற்படை கைது செய்த நாகை மீனவா்கள் 12 போ் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவா்கள் 12 பேரை, பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவா்கள் 12 பேரை, பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.
நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த சிலம்புச்செல்வன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், அப்பகுதியைச் சோ்ந்த குணா (40), செஞ்சிவேல் (45), வெங்கடேசன் (45), அலெக்ஸ் (28), சின்னப்பு (25), காா்த்தி (22), வளா்செல்வன்(25), ரகு (45), ரவி (50), மேகநாதன் (50), புஷ்பவனத்தைச் சோ்ந்த மகேந்திரன் (55), சாமுவேல் (22) ஆகிய 12 போ் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் இருந்து அக்டோபா் மாதம் 26- ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள், அக். 27- ஆம் தேதி அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். பின்னா், அந்நாட்டின் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், 12 மீனவா்களையும் விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, இந்திய தூதரகம் மூலமாக 12 பேரும் சென்னை வந்து, அங்கிருந்து விரைவில் நாகை வரவுள்ளனா்.