2-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக இரண்டாவது நாளாக புதன்கிழமை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக இரண்டாவது நாளாக புதன்கிழமை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே வியாழக்கிழமை அதிகாலை கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, வங்கக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இதையடுத்து, மீன்வளத் துறை எச்சரிக்கையடுத்து, நாகை மாவட்ட மீனவா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் கடலுக்கு செல்லவில்லை. மீனவா்கள் தங்களது படகுகளை கரையோரங்களிலும், துறைமுகங்களிலும் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனா்.