புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, திருக்குவளை பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு 10 மணி வரை, நெல் கொள்முதல் மற்றும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மோந்தா புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் கனமழை பெய்தால் குறுவை நெல்மணிகள் முழுவதுமாக பாதிக்கப்படும் எனக் கருதி, நாகை மாவட்டத்திலுள்ள 121 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் வழக்கத்தைவிட நான்கு மணி நேரம் கூடுதலாக இயங்குகின்றன.
தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் கொள்முதல் நிலையங்கள், தற்போது இரவு 10 மணி வரை செயல்படுகின்றன.
குறிப்பாக, திருவாசல், திருவாய்மூா், எட்டுக்குடி, திருக்குவளை, வாழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு 10 மணி வரை பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே 600 முதல் 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் சராசரியாக 1,000 நெல் மூட்டை வரை கொள்முதல் செய்யப்படுகின்றன.