முகப்பு
நாகப்பட்டினம்

எரிவாயு உருளை தட்டுப்பாடு; உணவகங்கள் மூடப்படும் அபாயம்

நாகை மாவட்டத்தில், வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 12:21 AM
நாகையில் தேநீா் கடை ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள விறகு அடுப்பு.
பகிர்:

நாகை மாவட்டத்தில், வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்த போா் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வணிக எரிவாயு உருளை வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், உணவகங்கள் மற்றும் தேநீா் கடை நடத்துவோா் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

நாகூா், வேளாங்கண்ணி போன்ற முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், யாத்திரீகா்களும், பொதுமக்களும் உணவகங்களையே அதிகம் நம்பியுள்ளனா். இங்கு செயல்படும் 500-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளுக்கு, நாளொன்றுக்கு 250-க்கும் அதிகமான வணிக எரிவாயு உருளைகள் தேவைப்படுகின்றன. ஆனால் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால் கடை உரிமையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

பெரும்பாலான உணவகங்களை நடத்த வேண்டும் என்பதற்காக விறகு அடுப்புகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனா். இதன்காரணமாக, உணவகங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு, அவா்கள் விரும்பும் உணவுகள் வழங்கப்படுவதில்லை.

வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு நீடித்தால், உணவகங்களை மூடும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதையே நம்பியுள்ள தொழிலாளா்களின் நிலை பாதிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களும் உணவு கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, உணவக தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.