அரசு சார்பில் விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்கும் விவகாரம் தொடர்பாக, விரைவில் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்கும் விவகாரம் தொடர்பாக, விரைவில் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் என். ரங்கசாமி தலைமை வகித்தார். தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ. பக்தவத்சலம் முன்னிலை வகித்தார்.இதில் அமைச்சர்கள் என்.ஜி. பன்னீர்செல்வம், தி. தியாகராஜன், அரசு கொறடா ஜி. நேரு, என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலர் வி. பாலன் ஆகியோர் பங்கேற்றனர்.
திமுக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச். நாஜிம், நந்தா டி. சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஆர். விஸ்வநாதன், பொருளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெ. பெருமாள், டி. முருகன், பா.ஜ.க. சார்பில் அதன் மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன், செயலர் சாமிநாதன், தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் சோமசுந்தரம், ஃபார்வர்டு பிளாக் முத்து, பா.ம.க. சார்பில் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், தேமுதிக சார்பில் செல்வராஜ் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ், மாநில அந்தஸ்து பெறுவதன் மூலம் புதுச்சேரிக்கு கிடைக்கும் நிதி, அதிகாரம், சலுகைகள் ஆகியவை குறித்து ஒளிப்படம் மூலம் விளக்கினார்.
இக்கூட்டத்தில் பேசிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தில் இருப்பதாகவும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதைவிட, அரசு சார்பில் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து முதல்வர் என்.ரங்கசாமி பேசியது:
புதுச்சேரி மாநில அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவைக்கான விவரத்தையும், இதுவரை மாநில அந்தஸ்து பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் விளக்கும் அறிக்கையையும் தயார் செய்து, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் தில்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மேலும் புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார் ரங்கசாமி. இக்கூட்டத்தை, காங்கிரஸ், அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.