தொகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து ராஜிநாமா: மரகதம் குமரவேல்
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து விலகியதாக மரகதம் குமரவேல் விளக்கம்...
திமுகவுடன் அதிமுக இணைவதை தாங்கள் விரும்பவில்லை என்பதாலும், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்ததாலும் அக்கட்சியில் இருந்து விலகியதாக மரகதம் குமரவேல் இன்று (மே 25) தெரிவித்தார்.
சுயநலனுக்காக ராஜிநாமா முடிவை எடுக்கவில்லை என்றும், தொகுதி மக்களின் கோரிக்கையை முன்வைத்து ராஜிநாமா நிலைப்பாட்டை எடுத்ததாகவும் விளக்கம் அளித்தனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ.க்களும் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்களுமாக அதிமுக பிரிந்தது.
Advertisement
Advertisement
சி.வி. சண்முகம் தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் உறுப்பினர் பதவியை இன்று ராஜிநாமா செய்தனர்.
அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த பிறகு மூவரும் தவெகவில் இணைந்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்தித்து உறுப்பினர் அட்டையை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுடன் பேசியதாவது:
''நாங்கள் பதவி விலகக் காரணம் என்ன என்பதைக் கூற கடமைப்பட்டுள்ளோம். திமுகவுடன் அதிமுக இணைவதை நாங்கள் விரும்பவில்லை. திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார். அதிமுகவுக்கு அவர் துரோகம் இழைத்தார்.
சுயநலனுக்காக ராஜிநாமா முடிவை எடுக்கவில்லை. சட்டப்பேரவையில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. தொகுதிகளில் எங்களைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். ஆனால், தொகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுதான் ராஜிநாமா நிலைப்பாட்டை நாங்கள் மூவரும் எடுத்தோம்.
பதவியேற்று 15 நாள்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பெண்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை முதல்வர் விஜய் முன்னெடுத்துள்ளார். பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மக்கள் பணி செய்கிறார்.
முன்பு போட்டியிட்ட தொகுதியில் மீண்டும் போட்டியிடுவோமா? என்பது குறித்து முதல்வர் விஜய் முடிவு செய்வார்'' என மரகதம் குமரவேல் பேசினார்.
I Do Not Wish to Join the DMK Maragatham Kumravel
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.