பள்ளி விளையாட்டு விழா
மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் மா. தேவி தலைமை வகித்தார். போட்டியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பி. அறிவழகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வி. விமலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், ஓட்டம், உயரம் தாண்டுதல், ஆசனங்கள், பிரமிடு ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வென்றவர்களுக்கு மணியன் நினைவுப் பரிசை முன்னாள் தலைமையாசிரியர் மீ. வீராமணியன், சான்றிதழை ஜேசிஐ மன்னை தலைவர் வி. அஞ்சறைப் பெட்டி ராஜேஷ் ஆகியோர் வழங்கினர்.
விழாவையொட்டி, தேரடி காந்தி சிலையிலிருந்து மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணியை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.விஜயா, அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் பி. சங்கரநாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று எம்ஜிஆர் நகரிலுள்ள பள்ளி விளையாட்டுத் திடலில் நிறைவடைந்தது. இதில், ஜேசிஐ முன்னாள் தலைவர் ஜி. செல்வக்குமார், செயலர் எம். முத்தமிழ்ச்செல்வம், உடற்கல்வி ஆசிரியர் சா. மைதிலி, ஆசிரியர் ச. மனோன்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.