முகப்பு
செய்திகள்

30, 40களிலேயே மூட்டு வலியா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?

மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி...

Updated On : 13 மார்ச், 2026 at 8:32 AM
கோப்புப் படம்
பகிர்:

இளம்வயதினரும் மூட்டு வலியால் சிரமப்படும் நிலையில் அதற்கான காரணங்களும் செய்ய வேண்டியவைகளும்...

முழங்கால் வலி அல்லது மூட்டு வலி என்பது மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. முன்னதாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மூட்டு வலி ஏற்படும் நிலையில் இப்போது 30, 40 வயதுகளிலேயே மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு காரணம் மாறிவரும் வாழ்க்கைச் சூழல் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் பருமன், உடல் இயக்கம் இல்லாதது, நேராக நிமிர்ந்து உட்காராதது, மோசமான உணவுப் பழக்கவழக்கம், மன அழுத்தத்துடன் தினமும் வேலை செய்வது ஆகியவை மூட்டு வலிக்கு வெளிப்புற காரணங்களாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆர்த்ரிடிஸ் எனும் கீல்வாதம், வீக்கம், காயம் ஆகியவற்றின் காரணமாகவும் ஏற்படுகிறது.

இதுவே, லேசானது முதல் மிதமான வலியாக இருந்தால் வீட்டிலேயே சிலவற்றைச் செய்வதன் மூலமாக சரிசெய்யலாம்.

என்ன செய்ய வேண்டும்?

முதலில் சரியான நிலையில் உட்கார வேண்டும். நன்றாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.

காலையும் நேராக வைத்து உட்காருவது அவசியம். மூட்டு வளையக் கூடாது.

மூட்டை மடக்கி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் உட்காரக் கூடாது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து அசைவு கொடுக்க வேண்டும்.

மூட்டு வலி அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்திய முறை கழிப்பறையைத் தவிர்த்து, வெஸ்டர்ன் கழிப்பறையைப் பயன்படுத்தலாம்.

இரண்டு கால்களையும் சமமாக வைத்து நடக்க வேண்டும், அதாவது ஒரே காலில் எடையைத் தாங்கும் விதத்தில் ஒரு காலுக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து நடக்கக் கூடாது. இது கண்டிப்பாக மூட்டு வலி பிரச்னையை ஏற்படுத்தும்.

நிபுணர்களின் அறிவுறுத்தலுடன் சில வகை ஆசனங்களைச் செய்யலாம்.

முடிந்தவரை சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

உடல் எடை அதிகமாக இருப்பதும் மூட்டு வலிக்கு முக்கிய காரணமாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக உடனடியாக நீண்ட தூரம் நடப்பது நல்லதல்ல, மருத்துவர்களின் ஆலோசனை பெற்று லேசான மிதமான நடைப்பயிற்சி, சரியான உணவுப்பழக்கவழக்கம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ஆன்டி-ஆக்சிடன்ட், அழற்சி எதிர்ப்பு நிறைந்த பெர்ரி, ஆப்பிள், கீரை, திராட்சை, மாதுளை ஆகியவற்றையும் அரிசிக்குப் பதிலாக கோதுமை, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது., அதேபோல சர்க்கரை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்,

ஒமேகா 3 அமிலம் நிறைந்துள்ள சூரியகாந்தி எண்ணெய், வெஜிடபிள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.

மன அழுத்தத்தை சரியான அளவில் நிர்வகிப்பதும் முக்கியம். ஏனெனில் மன அழுத்தத்தால் உடல் எடை கூடுவது போன்ற உடல்ரீதியான கோளாறுகள் ஏற்படும்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

summary

causes and solutions of joint pain, knee pain

முழு கட்டுரையைப் படிக்க →