காசோலை மோசடி வழக்கில் இரும்புக் கடை உரிமையாளருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை
மன்னார்குடியில் காசோலை மோசடி வழக்கில் இரும்புக் கடை உரிமையாளருக்கு, 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
மன்னார்குடியில் காசோலை மோசடி வழக்கில் இரும்புக் கடை உரிமையாளருக்கு, 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
மன்னார்குடி அப்துல்கலாம் நகரைச் சேர்ந்தவர் ஜெ. ராதாகிருஷ்ணன் (64). இவரது நண்பரான வாணக்காரத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணராமானுஜம், காந்திஜீ சாலையில் இரும்புக்கடை நடத்தி வந்தார். இவர், இறந்ததையடுத்து, அவரது மகன் ஜெயராமன் (68) இரும்புக்கடையை நடத்தி வந்தார்.
இந்நிலையில், இரும்புக் கடையை விரிவுப்படுத்த கடந்த 2000-ஆம் ஆண்டு, ராதாகிருஷ்ணனிடம், ஜெயராமன் ரூ. 2 லட்சம் வட்டியில்லாக் கடனாகப் பெற்றாராம்.
குறிப்பிட்ட நாளில் கடன் தொகையை ராதாகிருஷ்ணன் திரும்பிக்கேட்டபோது, காந்திஜீ சாலையில் உள்ள வங்கி பெயரில் 28.6.2001-ஆம் தேதி குறிப்பிட்டு, காசோலையை ஜெயராமன் வழங்கியுள்ளார். அப்போது, 2 மாதம் கழித்து வங்கியில் காசோலையை செலுத்தும்படி கூறினாராம்.
அதன்படி, அந்த காசோலையை ராதாகிருஷ்ணன் 7.9.2001-இல் வங்கியில் செலுத்தியபோது, அந்த காசோலையில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதாகிருஷ்ணன் இதுகுறித்து, மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயன், ஜெயராமனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.