சென்னையில் நடைபெற்ற காவலர் பணித்திறன் போட்டியில் முதலிடம் பிடித்த திருவாரூர் மாவட்ட காவலரை திங்கள்கிழமை நேரில் அழைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை காவல் உயர் பயிற்சியகத்தில் பிப்.24 முதல் 28-ஆம் தேதி வரை 61-ஆவது அகில இந்திய காவலர் பணித்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். புகைப்படம் மற்றும் விடியோகிராபி பிரிவில் தமிழக காவல்துறை சார்பில் திருவாரூர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த புகைப்பட நிபுணர் ந. திருமால்பதி பங்கேற்றார்.
இவர் புலனாய்வுப் பிரிவில் சிறப்பாக விடியோ எடுத்து, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததோடு, தங்கப்பதக்கமும் பெற்றார். மேலும் தமிழக முதல்வரிடம் பாராட்டையும் பெற்றார்.
இதையொட்டி, ந. திருமால்பதியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.