திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 4 லாரிகளை திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
முத்துப்பேட்டை கிழக்குக் கடற்கரை புறவழிச்சாலையில் கோவிலூர் பிரிவுச் சாலை அருகே வட்டாட்சியர் கே. மகேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் தங்கத்துரை, கிராம நிர்வாக அலுவர் சோழன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் கடத்தி வந்த 4 லாரிகளை தடுத்து நிறுத்தியபோது, லாரிகள் நிற்காமல் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் விரைந்தன.
இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை அலுவலர்கள் வாகனத்தில் விரட்டிச் சென்று, தம்பிக்கோட்டை கீவக்காடு காவல் சோதனைச்சாவடி அருகே லாரிகளை மடக்கினர். லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் தப்பியோடிவிட்டனர். வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் 4 லாரிகளையும் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.