கடன் பிரச்னை: விஷம் குடித்து சிகிச்சையிலிருந்த தாய், மகள் சாவு
மன்னார்குடியில் கடன் பிரச்னை காரணமாக விஷம் குடித்து சிகிச்சையிலிருந்த தாய், மகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
மன்னார்குடியில் கடன் பிரச்னை காரணமாக விஷம் குடித்து சிகிச்சையிலிருந்த தாய், மகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மதுக்கூர் சாலையைச் சேர்ந்தவர் ஆலமுத்து. இவரது மனைவி தமிழரசி (31), மகன் ஷியாம் (11), மகள் மனிஷா (9). ஆலமுத்து துபையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
கணவரின் சிகிச்சைக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்ததால் தமிழரசி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் அண்மையில் மகன், மகளுடன் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையறிந்த, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் மூவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில், ஷியாம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தமிழரசியும், மனிஷாவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இருவரும் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.