திருவாரூர் மாவட்டத்தில் 18 முதல் ஜமாபந்தி
திருவாரூர் மாவட்டத்தில் மே 18-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மே 18-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான (பொ) க. சக்திமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயக் கணக்குகள் முடித்தல் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நன்னிலம் வட்டத்தில் மே 18 முதல் 31-ஆம் தேதி வரை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் மே 18 முதல் 30 வரை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருவாரூர் வட்டத்தில் மே 18 முதல் 30 வரை திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மே 18 முதல் 30 வரை மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டத்தில் மே 18 முதல் மே 29 வரை திருவாரூர் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
இதேபோல், குடவாசல் வட்டத்தில் மே 18 முதல் 30 வரை திருவாரூர் தனித் துணை ஆட்சியர் தலைமையிலும், மன்னார்குடி வட்டத்தில் மே 18 முதல் ஜூன் 7 வரை திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டத்தில் மே 18 முதல் 29 வரை திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறும்.
அரசு விடுமுறை நாள்கள் (சனி, ஞாயிறு) மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக தினமும் காலை 10 மணிக்கு வருவாய்த் தீர்வாயக் கணக்கு தணிக்கை பணிகள் தொடங்கும் என்பதால், பொதுமக்கள் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் தங்கள் கிராமத்துக்குரிய வருவாய்த் தீர்வாயக் கணக்குகள் முடிக்கப்படும் நாளில் நேரில் ஆஜராகி, தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.