திறன் பயிற்சி விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
திருவாரூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெறும் திறன் பயிற்சி விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் (பொ) க. சக்திமணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
திருவாரூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெறும் திறன் பயிற்சி விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் (பொ) க. சக்திமணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
படித்த, வேலைவாய்ப்பற்ற, கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடமாடும் திறன் ஊர்தி மூலமாக விளம்பரம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு வழங்கும் பிரசார தொடக்கவிழா, திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் (பொ) க. சக்திமணி தொடங்கி வைத்துப் பேசியது:
தமிழகத்தைத் திறன்மிகு மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடனும், அதற்கேற்ப நமது மாநிலத்தை நாட்டின் திறன் மையமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடனும், இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முக்கியத் தொழில் நிறுவனங்கள் வழியாக உரிய திறன் பயிற்சிகளை 20-க்கும் மேற்பட்ட துறைகளில், 400-க்கும் அதிகமான பிரிவுகளில் முற்றிலும் இலவசமாக குறுகிய காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தினசரி போக்குவரத்துப் படியாக ரூ.100 வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழின் மூலமாக பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் சேரலாம் அல்லது சுயமாகத் தொழில் தொடங்கலாம் என்றார்.
விழாவில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கும் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வ. செல்லத்துரை, அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.