நீடாமங்கலம் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 20 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நீடாமங்கலம் கோரையாற்றுப் பகுதியில் உள்ள மீன் அங்காடியில், வியாபாரம் முடிந்ததும் அங்கு கடை வைத்திருக்கும் சிலருடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முனிசேகர், பொது இடத்தில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களைக் கண்டித்துள்ளார்.
இதில் கணேசன் என்பவர் காவல் ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டதால், அவரை போலீஸ் வேனில் முனிசேகர் ஏற்றினாராம். இதையடுத்து, அங்கு வந்த கணேசனின் தந்தை சாமிநாதன், சகோதரர்கள் மணி, குமரன் உள்ளிட்டோர் போலீஸ் வேனை நகரவிடாமல் தடுத்து அதை மறித்தனர். புகாரின்பேரில், காவல் ஆய்வாளரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கணேசன் உள்ளிட்ட 20 பேர் மீது நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.