தமிழகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு இணையவழியில் நடத்தப்படும் வகுப்புகளை எதிர்த்து வெள்ளிக்கிழமை நன்னிலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள் குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆனந்த் தெரிவித்ததாவது, தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் இணையவழி வகுப்பு நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணைய வசதி கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்ச்சியாக உள்ளது. அத்துடன் கிராமப் பகுதிகளிலிருந்து கல்லூரிப் படிப்பைப் படித்து வரும் ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவசதியுள்ள கைபேசியோ, மடிக்கணினியோ சொந்தமாக வாங்கும் அளவிற்கு வசதி இல்லை.
பிளஸ் 1 பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினியும் சரியாக செயல்படவில்லை. மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. எனவே கிராமப்புறங்களிலிருந்து கல்லூரிகளில் கல்வி பயிலும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழி வகுப்புப் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடிய நிலை உள்ளது. அத்துடன் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்க கூடிய நிலையும் உருவாகும். எனவே இணைய வழிக் கல்வியை ரத்து செய்திட வேண்டும்.
மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை இரத்து செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். நன்னிலத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்பு, கல்லூரி மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் தீபன் ராஜ், மாவட்ட துணைத் தலைவர் மதன் பாலா மற்றும் கல்லூரிக் கிளைச் செயலாளர் கிள்ளிவளவன் ஆகியோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.