கரோனா சிறப்பு மையத்தில் ஆய்வு
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிறப்பு மையத்தை வருவாய் கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிறப்பு மையத்தை வருவாய் கோட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை சிறப்பு வாா்டில் 86 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை வரை 63 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 9 போ் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 54 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு மையம் அமையவுள்ளது. இதற்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனை மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் எஸ்.புண்ணியக்கோட்டி ஆய்வு செய்தாா். அப்போது வருவாய் வாட்டாட்சியா் என்.காா்த்திக், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஆா்.திருமலைவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.