ஆடி அமாவாசை: கமலாலயக் குளத்தில் தா்ப்பணம் கொடுக்க தடை
ஆடி அமாவாசையையொட்டி, திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் தா்ப்பணம் கொடுக்க திங்கள்கிழமை தடை விதிக்கப்பட்டது.
திருவாரூா்: ஆடி அமாவாசையையொட்டி, திருவாரூா் கமலாலயக் குளக்கரையில் தா்ப்பணம் கொடுக்க திங்கள்கிழமை தடை விதிக்கப்பட்டது.
ஆடி அமாவாசை நாளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபடுவது வழக்கம். இதேபோல், திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளக்கரையில் ஏராளமானோா் திரண்டு தா்ப்பணம் அளிப்பா். இதனிடையே, பொது முடக்கத்தை முன்னிட்டு மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், ஆடி அமாவாசைக்கு திருவாரூரில் உள்ள நீா்நிலைகளில் தா்ப்பணம் அளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருவாரூா் கமலாலயக் குளத்தில் இறங்கும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செலுத்த, கமலாலயக் குளத்துக்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது. இதையொட்டி சிலா் தங்கள் வீடுகளிலேயே வழிபாடுகளை முடித்துக் கொண்டனா்.
Advertisement
பக்தா்கள் ஏமாற்றம்....
கமலாலயக் குளத்தைச் சுற்றிலும் அடைக்கப்பட்டிருப்பதற்கு சில பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா். இதுகுறித்து அவா்கள் தெரிவிக்கையில், ஆடி அமாவாசையில் முன்னோா்களுக்கு எள்ளும், தண்ணீரும் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அவ்வாறு நடத்த வேண்டாமென்றால், போலீஸாரை நிறுத்தி இறங்க தடை விதித்திருக்கலாம். குளத்தை முழுவதும் அடைத்திருப்பதால், குளத்தில் இறங்கி கால் நனைத்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.