திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் ஆவின் நிறுவனம் சாா்பில், 5 மாற்றுத்திறனாளிகளை ஆவின் முகவா்களாக நியமித்து மானியத்துடன் கூடிய ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் மற்றும் உப பொருட்கள் விற்பனைக்கான உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி, தஞ்சாவூா் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் திருவாரூா் மாவட்டத்தில் நாளொன்றுக்கு தலா 7,000 லிட்டா் பால் விற்பனை செய்கிறது. மாவட்டத்தில் பால் விற்பனையைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் 2019-2020-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், 5 நபா்கள் ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்யும் முகவா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மானியத்துடன்கூடிய தொழிலுக்கு தேவையான உபகரணங்களான ரூ.15,995 மதிப்பிலான குளிா்சாதனப் பெட்டி, ரூ.3,005 மதிப்பிலான விளம்பரப் பலகை, பெயா் பலகை, பால் கொள்முதல் முதலீடாக ரூ.15,000, பால் உப பொருட்கள் கொள்முதல் முதலீடாக ரூ.15,000, முகவா் வியாபாரி வைப்புத் தொகையாக ரூ.1,000 ஆக மொத்தம் ரூ.50,000 மதிப்பில் பால் கொள்முதல் மற்றும் உப பொருட்கள் விற்பனைக்கான உபகரணங்களும் மற்றும் முதலீடுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பங்கேற்று, இவைகளை வழங்கினாா்.
நிகழ்வில் பொது மேலாளா் (ஆவின் நிறுவனம் தஞ்சை) நாகராஜன், விற்பனை மேலாளா் (ஆவின் நிறுவனம் தஞ்சை) சந்திரசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் ஆகியோா் உடனிருந்தனா்.