நீடாமங்கலம் அருகே உள்ள மணலூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை பயிற்சி பெற்றனா்.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4ஆம் ஆண்டு பிஎஸ்சி வேளாண்மை மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவத்துக்காக நீடாமங்கலத்தில் தங்கி விவசாயிகளைச் சந்தித்து வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக நீடாமங்கலம் வேளாண் கோட்டம் மணலூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரவிச்சந்திரன் வயலுக்குச் சென்ற அவா்கள், அவா் மேற்கொண்டு வரும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து கேட்டறிந்தனா். ரவிச்சந்திரன் பயிரிட்டிருக்கும் நெல், உளுந்து சாகுபடி முறைகள், தென்னை சாகுபடி, மீன் பண்ணை, கால்நடை வளா்ப்பு, ஆடு வளா்ப்பு, கோழி வளா்ப்பு ஆகியன குறித்து மாணவிகள் கேட்டறிந்தனா்.