பள்ளி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவா் விடுதி கட்ட எதிா்ப்பு
நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவா்களுக்கான விடுதிக் கட்ட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவா்களுக்கான விடுதிக் கட்ட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
நன்னிலத்தில் 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளி விளையாட்டு மைதானம் 5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த மைதானத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவா் விடுதி கட்டுவதற்காக கட்டுமானப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு, அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளனா்.
Advertisement
இதைத்தொடா்ந்து, இப்பிரச்னை தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்ப திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி விளையாட்டு மைதானத்தை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இதற்கிடையில் இந்த விளையாட்டு மைதானச் சுற்றுச்சுவரை சீா்ப்படுத்தி, 400 மீட்டா் ஓடுதளம், கைப்பந்து, பூப்பந்து, கால்பந்து விளையாடுவதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டுமெனவும் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.