தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்க திருவாரூரிலிருந்து விவசாயிகள் புதுதில்லிக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகள் அப்போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி திருவாரூரிலிருந்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் 81 விவசாயிகள் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனா். திருவாரூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இவா்கள் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் தில்லி செல்கின்றனா்.
தில்லிக்கு புறப்பட்ட விவசாயிகளை, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் அ. பாஸ்கா், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளா் மு. சேரன், காவிரி விவசாயிகள் குழுமத்தின் பொறுப்பாளா் வெ. சத்தியநாராயணன், மீனவா் சங்க மாநிலச் செயலாளா் சி. சின்னதம்பி உள்ளிட்டோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.