ஆலங்குடி குரு கோயிலில் பாலாலயம்
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நவகிரக தலங்களில் குரு பகவானுக்குரிய தலமான இக்கோயிலில் கடந்த 11.6. 2009 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை விமான பாலாலயம் நடைபெற்றது. பின்னா், திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
இதையொட்டி, சுவாமி, அம்பாள், குரு தட்சிணாமூா்த்தி, ராஜகோபுரங்கள், இதர சன்னிதிகள், விமானங்களின் படங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் கூறியும், ஓதுவாமூா்த்தி தேவாரம் பாடியும் நடத்தினா்.
இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மற்றும் கோயில் தக்காா் ஹரிஹரன், கோயிலின் செயல்அலுவலா் தமிழ்ச்செல்வி, திமுக ஒன்றியச் செயலாளா் தெட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று வழிபட்டனா். தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூஜைகள் நடைபெற்றன.