முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூர் : இலவச வீடு கட்ட அரசு நிதி உதவிக்கான 70 மனுக்கள் வழங்கல்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், இலவச வீடு கட்ட அரசு நிதி உதவிக்காக, 70 மனுக்களை சட்டப் பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணனிடம் வழங்கினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
கூத்தாநல்லூரில் அரசு இலவச வீடு கட்ட நிதி உதவிக்கான மனுக்களைப் பெறுகிறார் எம்.எல்.ஏ., பூண்டி கே.கலைவாணன் .
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், இலவச வீடு கட்ட அரசு நிதி உதவிக்காக, 70 மனுக்களை சட்டப் பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணனிடம் வழங்கினர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வீடு இல்லாதவர்கள் தங்களது சொந்த இடத்தில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள அரசு இலவச நிதி உதவி அளிக்கிறது. அதற்கான நேர்முக சிறப்பு முகாம், கூத்தாநல்லூர் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு, ஆணையர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். பொறியாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலைப் பொறியாளர் வி.அரி கோவிந்தன் வரவேற்றார்.

கான்கிரீட் வீடு கட்டிக் கொள்வதற்கு, அரசு மான்ய நிதியான ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கான மனுக்களை, 70 பயனாளிகளிடம், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் வழங்கி, பேசினார்.

அப்போது அவர்,  “பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மக்கள் வீடு கட்டிக் கொள்ள, கடலூர் கோட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், மான்யம் வழங்கப்படுகிறது. அதற்கான, சிறப்பு முகாமில், 70 பயனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்களைப் பரிசீலனை செய்து, ரூ.2.10 லட்சம் மான்யம் வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய இளநிலைப் பொறியாளர் வி.அரி கோவிந்தன். “பயனாளிகள் தாங்கள் வசித்து வரும் இடத்தில், குறைந்தபட்சமாக 300 சதுர அடி பரப்பளவில் தாங்களாகவே கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள வேண்டும். இதற்காக, மத்திய அரசு மானியம் ரூ.1.50 லட்சம், மாநில அரசு ரூ.60 ஆயிரம் என மானியமாக ரூ.2.10 லட்சம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 4 தவணைகளாக செலுத்தப்படும். அவைகள், கட்டடத்தின் அடித்தளம் முடிவுற்ற பின் ரூ.50 ஆயிரம், கட்டடத்தின் லிண்டல் முடிவு பெற்ற பிறகு ரூ.50 ஆயிரம், கான்கிரீட் தளம் முடிவுற்றப் பின் ரூ.50 ஆயிரம் மற்றும் வீட்டின் வேலைகள் முழுமையாக முடிந்த பிறகு ரூ.60 ஆயிரம் என ரூ.2.10 லட்சம் வழங்கப்படும்.

பயனாளிகள் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொந்த இடத்தில் குடிசை வீடு அல்லது ஓட்டு வீட்டில்  இருப்பவராக இருக்க வேண்டும். பட்டா அல்லது பத்திரம் வைத்திருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பெயரிலோ அல்லது குடும்பத்தினர் பெயரிலோ வேறு வீடு எதுவும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இருக்கக் கூடாது” என்றார்.

நிகழ்ச்சியில், நகர அவைத் தலைவர் எஸ்.வி.பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →