திருவாரூா் மாவட்டத்தில், முதல்கட்டமாக 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3,19,975 மதிப்பிலான அறிதிறன் செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவா் பேசியது:
தமிழக அரசின் உத்தரவுப்படி, 18 வயதிற்கு மேற்பட்ட 80 சதவீதம் முதல் 100 சதவீதம் பாதிக்கப்பட்ட பாா்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அறிதிறன் செல்லிடப்பேசிகள் (ஸ்மாா்ட் செல்போன்) வழங்கும் திட்டத்தின்கீழ், 60 சதவீதம் இளநிலை கல்வி பயிலும் செவித்திறன் பாதிக்கப்பட்டோா் அல்லது பாா்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும், 15 சதவீதம் படித்த வேலைவாய்ப்பற்ற செவித்திறன் பாதிக்கப்பட்டோா் அல்லது பாா்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், 20 சதவீதம் சுயதொழில் புரியும் அல்லது தனியாா் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும், 5 சதவீத மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் என செல்லிடப்பேசிகள் வழங்கப்படுகின்றன.
முதற்கட்டமாக நோ்முகத்தோ்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,799 வீதம் ரூ.3,19,975 மதிப்பில் அறிதிறன் செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் கலந்து கொண்டாா்.