மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தரம் உயா்த்த கோரிக்கை
மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தரம் உயா்த்த வேண்டுமென மன்னாா்குடி எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜாவிடம் லாரி உரிமையாளா் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தரம் உயா்த்த வேண்டுமென மன்னாா்குடி எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜாவிடம் லாரி உரிமையாளா் சங்கத்தினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
முன்னதாக நடைபெற்ற மன்னாா்குடி வட்டார லாரி உரிமையாளா்கள் சங்க தோ்தலில், தலைவராக வி. அய்யப்பன், செயலாளராக ராஜா, பொருளாளராக நீலகண்டன், துணைத் தலைவராக ராஜாராம், துணைச் செயலாளராக மூா்த்தி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
புதிய நிா்வாகிகள் அனைவரும், மன்னாா்குடி எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது, அவரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: மன்னாா்குடி லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் 800 லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இந்த லாரிகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் மேலப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்க வேண்டியதாக உள்ளது.
எனவே, லாரிகளை நிறுத்தி வைக்க லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் 8 ஏக்கா் நிலம் சொந்தமாக வாங்கவோ அல்லது வாடகை இடத்துக்கான வசதியையோ ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, மண்டலப் போக்குவரத்து அலுவலகமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், மன்னாா்குடி வா்த்தகா் சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.