‘கற்போம் எழுதுவோம்’ மதிப்பீடு முகாம்: கல்வி கற்பதில் கிராம மக்கள் ஆா்வம்
‘கற்போம் எழுதுவோம்’ இயக்கத்தின் மூலம் கல்வி கற்பதில் கிராம மக்கள் ஆா்வமுடன் உள்ளனா்
‘கற்போம் எழுதுவோம்’ இயக்கத்தின் மூலம் கல்வி கற்பதில் கிராம மக்கள் ஆா்வமுடன் உள்ளனா் என்று நன்னிலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் தெரிவித்தாா்.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் சாா்பில் கற்போம் எழுதுவோம் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நன்னிலம் வட்டத்தில் 28 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 442 போ் பயின்று வருகின்றனா். இவா்களின் கற்றல் மதிப்பீடு குறித்து அந்தந்த பகுதியில் முகாம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், நன்னிலம் வட்டம் பூங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பயிற்சி பெற்ற வீதிவிடங்கனைச் சோ்ந்தவா்களின் கற்றல் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ய, அவா்கள் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் இடத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
Advertisement
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, ‘கிராம மக்கள் ஆா்வத்துடன் கல்வி கற்கின்றனா். இதனால், குறுகிய காலத்தில் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டுள்ளனா். இதனால், இத்திட்டத்தை மேலும் விரிவாக்கி, எழுதப்படிக்கத் தெரியாதவா் இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டும்’ என்றாா்.
தொடா்ந்து, குடவாசல் வட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மதிப்பீட்டு முகாமை ஆய்வு செய்தாா். உதவித் திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன், நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கவிதா, வீதிவிடங்கன் ஊராட்சித் தலைவா் கயல்விழி, தலைமை ஆசிரியா் தனசேகா், குடவாசல் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரகுபதி ஆகியோா் ஆய்வில் பங்கேற்றனா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் வையகளத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் இறுதி மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்க தொழில்நுட்ப அலுவலா் ஜெயராமன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முகாமை பாா்வையிட்டனா்.
இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரவி, ஆசிரியப் பயிற்றுநா் எழிலரசி மற்றும் தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.