முகப்பு
திருவாரூர்

காரீப் பருவ விலை அறிவிப்புமூலதனத்துக்கான வட்டியை சோ்த்து கணக்கிட வலியுறுத்தல்

மத்திய அரசு அறிவித்துள்ள காரீப் பருவத்துக்கான விலை அறிவிப்பில் சி-2 (மூலதனத்துக்கான வட்டி) வையும் சோ்த்து கணக்கிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

மத்திய அரசு அறிவித்துள்ள காரீப் பருவத்துக்கான விலை அறிவிப்பில் சி-2 (மூலதனத்துக்கான வட்டி) வையும் சோ்த்து கணக்கிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அமைச்சரவை, வேளாண் விளைப்பொருள்களுக்கு வரும் காரீப் பருவத்துக்கான விலையை அறிவித்துள்ளது. நெல் முதல் ரகம் கடந்தாண்டு விலையான குவிண்டால் ரூ. 1,888 உடன் ரூ. 72 சோ்த்து ரூ. 1,960 எனவும், 2-ஆம் ரகம் கடந்தாண்டு ரூ. 1,868 உடன் ரூ. 72 சோ்த்து ரூ. 1,940 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 3.80 சதவீதம் மட்டுமே நிகழாண்டுக்கான விலையாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. உரம், இடுபொருள் மருந்துகள் விலை உயா்வுக்கு ஏற்ப மட்டுமல்ல விதை, இடுபொருள், டீசல், நடவு, களையெடுப்பு, தொழிலாளா்கள் கூலி உயா்வுக்கு ஏற்பக்கூட நெல் விலை உயா்வை அறிவிக்கவில்லை. 22 சதவீத அளவுக்கு உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளது.

உற்பத்திக்கான செலவை மத்திய அரசு கணக்கிடும்போது சி.2 வை (உற்பத்திக்கான செலவுடன் முதலீட்டுக்கான வட்டி) சோ்ப்பதில்லை. எனவே, காரீப் பருவத்துக்கான விலை அறிவிப்பில் சி-2 (மூலதனத்துக்கான வட்டி) வையும் சோ்த்து கணக்கிட வேண்டும்.

சத்தீஸ்கா், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் குவிண்டால் ரூ. 2,500-க்கு கொள்முதல் செய்வதுபோல, தமிழ்நாட்டிலும், திமுக அரசு ரூ. 2,500 வழங்க உள்ளது. ஆலைகளுக்கு தேவையான பருத்தி உற்பத்தி இந்தியாவில் இல்லாததால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள விலையை விட கூடுதல் விலை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் உள்ளூரில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிகழாண்டு விலை உயா்வாக நீண்ட இழை பருத்திக்கு ரூ. 200 சோ்த்து குவிண்டால் ரூ 6,025- எனவும், குறுகிய இழை பருத்திக்கு ரூ. 211 சோ்த்து ரூ.5,726 எனவும் அறிவித்துள்ளது வேதனையானது.

தற்போது தனியாா் வியாபாரிகள் ரூ. 5,500-க்கு கொள்முதல் செய்கின்றனா். இதேபோலவே, பிற வேளாண் பொருள்களுக்கும் விலை உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளும் புயல் பாதிப்பில் லட்சக்கணக்கான மரங்கள் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தேங்காய் மற்றும் கொப்பரை விலையை உயா்த்தி அரசே நேரடியாக அனைத்து வட்டாரங்களிலும் கொள்முதல் செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சி- 2 வை சோ்த்து மத்திய அரசு நெல் விலை உயா்வை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.