மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு யோசனை
குறுவையில் கூடுதல் மகசூல் பெற மண் பரிசோதனை செய்துகொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
குறுவையில் கூடுதல் மகசூல் பெற மண் பரிசோதனை செய்துகொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: குறுவைக்கு நெல் நாற்றுவிடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நடவு வயல்களில் மண் மாதிரி எடுத்து உரம்இட முன்வரவேண்டும். நிலத்தில் என்ன சத்து உள்ளது, பயிருக்கு தேவையான உர அளவு எவ்வளவு இடவேண்டும், மண்ணில் கூடுதலாக உள்ள சத்துகளின் அளவை தெரிந்து உர அளவை குறைத்து பயன்படுத்த மண் பரிசோதனை உதவுகிறது.
இதன்மூலம் தேவையற்ற செலவு குறைவதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. வயலில் மண் மாதிரி எடுக்கும் முன் மண் மாதிரி எடுக்கும் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து அப்பகுதியின் நில அமைப்பு நிலச்சரிவு இவற்றுக்கு தகுந்தமாதிரி நிலத்தை பல பகுதியாக பிரித்து தனிதனியாக மாதிரிகள் எடுக்க வேண்டும்.
வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல், கிணறு, உரங்கள் இட்ட வயல்கள் மற்றும் பயிா்கள் உள்ள இடங்களில் மண் மாதிரிகள் எடுக்க கூடாது. மண் மாதிரி பரிசோதனை செய்வதன் மூலம் பயிரின் தேவைக்கு ஏற்ப உர அளவு தெரிந்து விடுவதால் உரச்செலவு குறைகிறது. பரிந்துரைக்கப்படும் அளவைவிட தழைச்சத்து அதிகமாக பயன்படுத்துவதால் பயிா்கள் மிகுந்த பச்சைநிறத்துடன் காட்சி அளிப்பதால் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் தேவையில்லாத அதிக உரச்செலவை குறைக்க மண் பரிசோதனை செய்து பயன்பெறலாம் என யோசனை தெரிவித்துள்ளாா்.