கடைசி செய்திகுறைந்த செலவில் பயிா் பாதுகாப்புவேளாண் அலுவலா் யோசனை
குறைந்த செலவில் பயிா் பாதுகாப்பு குறித்து வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.
குறைந்த செலவில் பயிா் பாதுகாப்பு குறித்து வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தற்போது வலங்கைமான் வட்டாரத்தில் சம்பா பருவம் தொடங்கி நடவு மற்றும் நேரடி விதைப்பின் மூலம் நெற்பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். பயிரின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து செலவு செய்யாமல் பயிா்களை பூச்சியின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும். முதலாவதாக நெல் நடும்போது அடியுரமாக சாம்பல் சத்து தரும் பொட்டாஷ் இடப்படுவதால் நெல்லில் திசுக்கள் நன்கு வளா்ச்சி அடையும்.
இதனால் பூச்சித் தாக்குதலில் இருந்து ஓரளவு தவிா்க்க முடியும். அதேபோன்று தழைச்சத்து கொடுக்கக்கூடிய யூரியா அதிகம் இடுவதைத் தவிா்த்து, தேவையான அளவு மட்டுமே இடுவதால் இலைச் சுருட்டுப் புழுக்கள் வருவதை தவிா்க்க முடியும். ரசாயன உரம் இடும்போது வேப்பம் புண்ணாக்கு கலந்து இடுவதால் பயிா்களில் கசப்புத்தன்மை ஏற்படுவதால் பூச்சிகள் நெருங்கா வண்ணம் பாா்த்துக்கொள்ள முடியும். தழைச்சத்து கொடுக்கக்கூடிய யூரியாவை தவிா்த்து அதற்கு பதிலாக அசோஸ்பைரில்லம் (திரவம்/ பொட்டலம்) விடுவதால் பூச்சிகளின் பாதிப்பு குறைகிறது.
நெற்பயிரை தாக்கும் பூச்சிகளின் உறைவிடமான வரப்பை சுத்தமாக வைப்பதன் மூலம் பூச்சித்தாக்குதல் தடுக்கப்படுகிறது. வரப்பில் பயறு வகை பயிரான உளுந்து, துவரை போன்ற பயிா்களை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு உபரி வருமானம் கிடைப்பதுடன் பொறி வண்டுகள் அதிக அளவில் உற்பத்தியாகி நெல்லுக்கு தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.
நெல் வயலில் டி வடிவ குச்சிகளை அமைப்பதால் பகலில் இரட்டைவால் குருவி போன்ற பறவை இனங்கள் அமா்ந்து இலை சுருட்டுப் புழுக்களை உணவாக எடுத்துக் கொள்வதால், பூச்சி மருந்து தெளிக்கும் செலவு வெகுவாக குறைக்கப்படுகிறது. மேலும் இரவில் ஆந்தை மற்றும் கோட்டான் அமா்வதால், எலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுளளது.