முகப்பு
திருவாரூர்

இணையவழி நெல் கொள்முதல்: சிக்கல்களுக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

நெல்கொள்முதலில் இணையவழி முன்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீா்வுகாணப்பட்ட பிறகே இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

நெல்கொள்முதலில் இணையவழி முன்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீா்வுகாணப்பட்ட பிறகே இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் காா்பரேஷன் பணியாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை இணையவழியாக முன்பதிவு செய்யும் முறை அமல்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதில் நடை முறை சிக்கல்கள் பல உள்ளன.

உதாரணமாக இணையம் வழியாக விவசாயிகளே பதிவு செய்யும்போது நெல்லின் ஈரப்பதம் எவ்வளவு என்ற விவரம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அரசால் வரையறுக்கப்பட்ட அளவுகோளில் இருக்கிறதா என்ற கேள்விகளும் எழும். அதனால், ஈரப்பதம் வித்தியாசத்தால் ஏற்படும் இழப்புக்கான தொகை பிடித்தத்துக்கு, கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பணியாளா்களே பொறுப்பேற்க நேரிடும்.

மேலும், விவசாயிகள் பதிவு செய்வது அறுவடைக்குப் பிறகா அல்லது அறுவடைக்கு முன்பாகவா என்ற விவரம் பதிவில் இல்லை. இதனால், முன்னுரிமை வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் முன்பதிவு முறை பற்றி போதிய அனுபவம் மற்றும் பயிற்சிகள் இல்லை. கொள்முதல் நிலையப் பணியாளா்களுக்கும் போதிய பயிற்சிகள் அளிக்கப்படவில்லை.

எனவே, இத்தகைய நடைமுறை சிக்கல்களை சரிசெய்த பிறகு இத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.