உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகள்: முதலிடத்தில் பாகிஸ்தான்!
உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகள் பற்றி...
உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
காற்றில் உள்ள அபாயகரமான நுண்ணியத் துகள்கள் உலகளாவிய தரநிலையை விட மிகவும் அதிகமாக இருப்பதால் கடந்த 2025-ம் ஆண்டின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தான் முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனமான ஐக்யூ ஏர் நிறுவனம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் காற்றில் உள்ள நுண்ணிய துகள்களான பிஎம் 2.5 உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவைவிட 13 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் இதனால் உடல்நல அபாயங்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, எஸ்டோனியா மற்றும் பனாமா ஆகிய நாடுகள் உள்பட 2025-ல் மொத்தமாக 13 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்தபடி, நுண்ணிய துகள்கள் பி.எம். 2.5 அளவில் 1 கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராமுக்கும் குறைவாக இருக்குமாறு பராமரித்து வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 2024 ஆம் ஆண்டைவிட அதிகமாக 7 நாடுகள் இணைந்துள்ளன.
ஆனால், அதிகபட்ச நாடுகள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆய்வில் கண்காணிக்கப்பட்ட 143 நாடுகளில் 130 நாடுகள் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள காற்று தர நிர்ணய அளவைப் பூர்த்திசெய்யத் தவறிவிட்டன.
மேலும், உலகின் 14% நகரங்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட காற்று தர அளவைப் பூர்த்திசெய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2024-ஐ விட 17% குறைவு.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் கூட காற்று மாசு அளவு அதிகரித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகம் மாசுபட்ட நாடுகளில் பாகிஸ்தானுக்கு அடுத்ததாக வங்கதேசம், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் 2 மற்றும் 3-ம் இடங்களில் உள்ளன.
சில நாள்களுக்கு முன்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பயங்கரவாதக் குறியீட்டில் பாகிஸ்தான் முதன்முறையாக முதலிடத்தில் இடம்பெற்றது.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தால் ஏற்படும் மரணங்கள் 2013 முதல் மிகவும் அதிகமடைந்துள்ளன. முந்தைய ஆண்டை விட 6% பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து, அதன் காரணமாக 2025-ல் மட்டும் 1,139 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.