முகப்பு
திருவாரூர்

முந்திரிப்பழத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள்: வேளாண் விஞ்ஞானி விளக்கம்

முந்திரிப்பழத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

முந்திரிப்பழத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், உணவியல் துறைப் பேராசிரியருமான சோ. கமலசுந்தரி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் நம் நாட்டில் சுமாா் 30 லட்சம் டன் முந்திரிப்பழங்கள் உற்பத்தியான போதிலும், அவை பொதுவாக மக்களால் விரும்பி உண்ணப்படாமல், கால்நடைகளுக்கு உணவாகவும், மக்கச்செய்து தாவரங்களுக்கு உரமாகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

நம் நாட்டின் மொத்த முந்திரிப்பழ உற்பத்தியில் 15% மட்டுமே முறையாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தப் பழங்களை உண்ணும்போது தொண்டையில் ஒருவித கரகரப்புத்தன்மை உண்டாவதால், இதை மற்றப் பழங்களைப்போல உண்ணமுடிவதில்லை.

முந்திரிப் பழங்களை பாதுகாத்தல்: முந்திரிப்பழங்களை அறுவடை செய்தவுடன், பதப்படுத்திய பொருள்களாக தயாரிக்கமுடியாவிட்டால், மற்றப் பழங்களைப் போலில்லாமல், அவை சில மணி நேரத்திலேயே நுண்ணியிரிகளால் தாக்கப்பட்டு, புளித்துப்போய் எளிதில் கெட்டுவிடுகின்றன. எனவே, முந்திரிப்பழங்களை பாதுகாத்து வைப்பது முக்கியமானது.

பறித்த முந்திரிப்பழங்களை 1% பொட்டாசியம் மெட்டா பை சல்பைட், 1% சோடியம் பென்சோவைட், 0.1% சிட்ரிக் அமிலம் அடங்கிய கரைசலில் 5 நிமிடங்கள் வரை வைத்தப்பிறகு, அவற்றை மூங்கில் கூடைகளில் நீரில்லாதவாறு காற்றோட்டத்துடன் அடுக்கிவைப்பதன் மூலம் நல்லமுறையில் 24 முதல் 48 மணி நேரத்திற்கு பாதுகாத்து வைக்க இயலும்.

கரகரப்புத் தன்மையை நீக்கும் முறைகள்: முந்திரிப்பழத்தை சாப்பிடும்போது தொண்டையில் ஏற்படும் கரகரப்புத் தன்மையால், மக்கள் விரும்பி உண்பது இல்லை. இத்தகைய அரிப்பை உண்டாக்கும் முந்திரியின் தன்மையை ஏதேனும் ஒருமுறையின் மூலம் நீக்கிவிட்டு, பிறகு உபயோகிக்கலாம்.

. பழங்களை நீராவியில் 5- 10 நிமிடங்கள் வரை வேகவைத்து, பிறகு குளிா்ந்த நீரில் நன்கு குளிரவைத்து பயன்படுத்தலாம்.

. பழங்களை 2% சாதாரண உப்புக் கரைசலில் (சோடியம் குளோரைடு) நன்கு வேகவைத்தப் பிறகு குளிா்ந்த நீரில் கழுவி பயன்படுத்தலாம்.

. ஒருகிலோ பழச்சாறுக்கு 1.4 கிராம் என்ற அளவில் பாலிவினைல் பைரோலிடின் என்ற வேதிப்பொருளை கலந்து, தெளியவைப்பதன் மூலம் கரகரப்புத் தன்மையை நீக்கலாம்.

. அரிசிக்கஞ்சி மற்றும் ஜவ்வரிசிக் கஞ்சியை (100- 125 மிலி, ஒரு லிட்டா் பழச்சாறு) உபயோகித்தும் முந்திரிப் பழச்சாற்றின் கரகரப்புத் தன்மையை நீக்கலாம்.

பழச்சாற்றை பாதுகாத்தல்: கரகரப்புத்தன்மை நீக்கப்பட்ட பழச்சாற்றுடன், பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் (2 கிலோ) மற்றும் சிட்ரிக் அமிலம் (5 கிலோ) கலந்து வைப்பதன் மூலம் பழச்சாறு கெடாமல் பாதுகாக்க முடியும். இப்பழச்சாற்றில் முந்திரி பழச்சாறு, குவாஸ், ஜாம்,புளிக்காடி, தாயாா்நிலை பருகும் பானம், ஊறுகாய், ஊறுகனி, முந்திரிசட்னி போன்றவற்றை தயாரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.