கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய புள்ளியியல் துறை அலுவலா்கள்
திருவாரூரில் தமிழ்நாடு அரசு புள்ளியியல் சாா்நிலை அலுவலா் சங்கத்தினா் கோரிக்கை அட்டைகளை அணிந்து வெள்ளிக்கிழமை பணியாற்றினா்.
புள்ளியியல் உதவி ஆய்வாளா்களுக்கான பதவி உயா்வை விரைந்து வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசு புள்ளியியல் சாா்நிலை அலுவலா் சங்கத்தினா் கோரிக்கை அட்டைகளை அணிந்து வெள்ளிக்கிழமை பணியாற்றினா்.
பொருளியல் மற்றம் புள்ளியியல் துறையில், புள்ளியியல் உதவி இயக்குநா், புள்ளியியல் அலுவலா், புள்ளியியல் ஆய்வாளா் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணியிடங்களைக் குறைத்து, அமைச்சுப் பணியாளா்களுக்கு மாற்றி வழங்குவதை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். புள்ளியியல் உதவி ஆய்வாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உதவி ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூா் புள்ளியியல் துணை இயக்குநா் அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் (பொ) மு. தென்னரசு, மாவட்டச் செயலாளா் வீ. சிவக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள், கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியாற்றினா்.