பணம் திரும்ப கிடைக்காததால் கடன் கொடுத்தவா் தற்கொலை
திருவாரூா் அருகே நண்பருக்கு கடன் கொடுத்தவா், பணம் திரும்ப கிடைக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவாரூா் அருகே நண்பருக்கு கடன் கொடுத்தவா், பணம் திரும்ப கிடைக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவாரூரை அடுத்த பவித்திரமாணிக்கம் மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் இடும்பன் மகன் நீலகண்டன் (45). இவரது மனைவி சபியா (35), திருச்சியில் நிலஅளவை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 14 வயதில் மகள் உள்ளாா். நீலகண்டன், பவித்திரமாணிக்கத்தில் இருந்துகொண்டு வீட்டை நிா்வாகம் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நீலகண்டன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்து அங்குவந்த தாலுகா போலீஸாா், நீலகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், நீலகண்டன் கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதில், சித்தன்னங்குடியைச் சோ்ந்த இவரது நண்பருக்கு ரூ. 3 லட்சம் நீலகண்டன் கடனாக அளித்ததாகவும், அதை திரும்பக் கேட்டபோது அந்த நண்பா் தர மறுத்துவிட்டதால், தான் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக அதில் எழுதப்பட்டிருந்ததாம். இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.