கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மரக்கடை நண்பர்கள் குழு நடத்திய கால்பந்தாட்ட தொடர் போட்டியின் இறுதிச் சுற்றில், திட்டச்சேரி அணி கோப்பையைக் கைப்பற்றினர். மரக்கடை நண்பர்கள் குழுவின், 4 ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி வெள்ளிக்கிழமை இரவு, மரக்கடை மைதானத்தில் தொடங்கப்பட்டது.
தொடர் போட்டியில், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை , காரைக்கால் , மயிலாடுதுறை, அதிராம்பட்டினம், நாகூர், மதுக்கூர் , திட்டச்சேரி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, பொதக்குடி , பூதமங்கலம், தண்ணீர் குன்னம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து, 30 அணிகளின் வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
தொடர்ந்து விளையாடி போட்டியின் இறுதிச் சுற்றில், எம்ஃப்சி திட்டச்சேரி அணி வீரர்கள் முதலிடம் பிடித்து, கோப்பையைக் கைப்பற்றினார்கள். பூதமங்கலம் அணி இரண்டாம் இடமும், மரக்கடை நண்பர்கள் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். சிறந்த அணிக்கான பரிசை டீஎஃப்சி அத்திக்கடை அணிக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது
இவ்விழாவில், தொழிலதிபர் அஜாத்யன் முதலிடம் பிடித்த திட்டச்சேரி அணிக்கு கோப்பையை வழங்கினார். நிகழ்வில், நகரமன்ற துணைத் தலைவர் பொன்னாச்சி, பொது சேவை மைய நிறுவனர் நஜ்முதீன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். போட்டி ஏற்பாடுகளை, மரக்கடை நண்பர்கள் குழு எம்.எம்.ரசின் பைசல் உள்ளிட்ட நிர்வாகிகள் கவனித்தனர்.