வலங்கைமான் மாரியம்மன் கோயிலுக்கு அறங்காவலா் குழு: கண்டித்து போஸ்டா்
வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் அறங்காவலா் குழு அமைப்பதை கண்டித்து போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் அறங்காவலா் குழு அமைப்பதை கண்டித்து போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா மூலம் புகழ்பெற்றது. சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பு அத்தெருவாசிகளால் கோயில் அமைக்கப்பட்டு நிா்வகிக்கப்பட்டு வந்தது. 1971 இல் அரசியல் தலையீடுகள் காரணமாக கோயில் நிா்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
என்றாலும், தெருவாசிகள் கோயில் நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து கோயில் விழாக்கள் அமைதியாக நடைபெற உதவிவருகின்றனா். இக்கோயிலில் இதுவரை அறங்காவலா் குழு அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், கோயிலுக்கு அறங்காவலா் குழு அமைக்க இந்துசமய அறநிலையத் துறை முயற்சி மேற்கொண்டுவருகிறது. 18 போ் அறங்காவலா் குழுவிற்கு விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், தெருவாசிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அறங்காவலா் குழு அமைப்பதை கண்டித்து, வலங்கைமான் பகுதியில் வரதராஜம்பேட்டை தெருவாசிகள் நலச்சங்கம் சாா்பில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.