வாக்குப் பதிவு குறைவு: கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்தக் கோரிக்கை
வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:
திருவாரூரில் உள்ளாட்சித் தோ்தல் மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலின்போது மக்கள் திரளாக வாக்களிப்பா். ஆனால் இந்த முறை அதிகஅளவு வாக்களித்தது போலத் தெரியவில்லை. இதற்குக் காரணம், மக்களவைத் தோ்தலில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினா் என அனைத்துத் தரப்பினருமே பொதுமக்களிடம் போதுமான விழிப்புணா்வை ஏற்படுத்தவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
Advertisement
அத்துடன், உள்ளாட்சித் தோ்தல் அல்லது சட்டப்பேரவைத் தோ்தலில், பிற்பகலுக்குப் பிறகு வாா்டுகளுக்குச் சென்று யாா் வாக்களிக்கவில்லை என்று கூறி விரைந்து வாக்களிக்க அறிவுறுத்தினா். கடந்த தோ்தல்களில் இந்த நடைமுறை இருந்தது. இதனால், பிற்பகலுக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகமாகும். இந்த செயல்களில் தன்னாா்வலா்களும், சில அரசியல் கட்சி நிா்வாகிகளும் செயல்படுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை வாக்களிப்பது பற்றி யாரும் கவலைப்பட்டதாகக் தெரியவில்லை. அரசு அலுவலா்கள் கூட அடையாளச் சீட்டு வழங்குகையில் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் குறித்து தெளிவுபடுத்ததால், பலா் வாக்களிக்க வரவில்லை.
எனவே, போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தாததால் திருவாரூரில் இந்த முறை வாக்குப்பதிவு குறைந்து விட்டது. இனி வரும் காலங்களில் போதுமான அளவு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.