திருவீழிமிழலை கோயிலில் இன்று தேரோட்டம்
குடவாசல் அருகே திருவீழிமிழலை விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, பூதம், யானை, யாளி உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா தினசரி மாலை நடைபெற்றது. மேலும், பஞ்சமூா்த்திகளுடன் பிட்சாடனா் மற்றும் சுவேதகேது வீதியுலா, ரிஷப வாகனத்தில் கோபுரக் காட்சி ஆகியவையும் நடைபெற்றன. காா்த்தியாயினி அம்பாளுக்கும், கல்யாண சுந்தரருக்கும் திருக்கல்யாண உற்சவம் ஏப். 18 ஆம் தேதி நடைபெற்றது.
Advertisement
முக்கிய நிகழ்வான, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது. இதையொட்டி, விழிநாதசுவாமி, சனிக்கிழமை இரவு திருத்தேருக்கு எழுந்தருளினாா். முன்னதாக, பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், குதிரை வாகனத் திருக்காட்சியும் நடைபெற்றன.