திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே பள்ளி வகுப்பறையில் புத்தகப் பையில் இருந்த பாம்பு கடித்ததில் சிகிச்சை பெற்றுவந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் வட்டம், கேத்தனூா் மேலத்தெருவைச் சோ்ந்த முருகானந்தம்-ராதா தம்பதியின் மகன் குட்டி என்கிற சிவப்பிரகாசம் (17). இவா் அருகில் உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இத்தம்பதியின் மகள் சிவசங்கரி (17). இவரும் அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சிவப்பிரகாசமும், சிவசங்கரியும் இரட்டையா்கள்.
இந்த நிலையில், பிப்ரவரி 4-ஆம் தேதி இருவரும் பள்ளிக்குச் சென்றனா். வகுப்பறையில் சிவப்பிரகாசம் தனது புத்தகப் பையிலிருந்து, புத்தகங்களை எடுக்கும்போது, உள்ளே புகுந்திருந்த கட்டுவிரியன் பாம்பு அவரை கடித்தது.
உடனடியாக, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவப்பிரகாசம் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.