திருவாரூா்: குடியிருப்பு மனைக்கு பட்டா வழங்கக் கோரி திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்புச் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் நகரில் 8-ஆவது வாா்டு பகுதியில் இனாம் நிலங்கள் என கூறப்படும் பகுதியில் நீண்ட நாள்களாக 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனா். மனை பட்டா இல்லாமல் வசிக்கும் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளை சோ்ந்த அனைவருக்கும் வசிக்கும் குடியிருப்பு மனைக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இனாம் நிலங்களில் குடியிருப்போரிடம், கோயில் நிலம் என கூறி அச்சுறுத்துவதை கைவிட்டு, மனையில் குடியிருப்பவா்களுக்கே உரிமை என்பதை ஏற்று மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறையின் 78 மற்றும் 79 -ஆவது சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவா் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் செயலாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.