முகப்பு
புதுதில்லி

முகலாயர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை தில்லி!

தில்லி, செங்கோட்டைக்குள் அமைந்த நகரப்பகுதி. நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி ரயில் பாதை, சாந்தினி சௌக் சாலையில் அகன்ற திண்ணைகளுடன் நடுப்பகுதியில் மரங்கள், காஜியாபாதிலிருந்து செங்கோட்டைக்கு இடையே ரயில் போக

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:36 PM
பகிர்:

தில்லி, செங்கோட்டைக்குள் அமைந்த நகரப்பகுதி. நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி ரயில் பாதை, சாந்தினி சௌக் சாலையில் அகன்ற திண்ணைகளுடன் நடுப்பகுதியில் மரங்கள், காஜியாபாதிலிருந்து செங்கோட்டைக்கு இடையே ரயில் போக்குவரத்து - இவை எல்லாம் கதையோ, கற்பனையோ அல்ல! முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது நடைபெற்று வந்த பழங்கால நிகழ்வுகளின் அரிய படங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தலைநகராக தில்லி மாறி 100 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் ஜன்பத் சாலையில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் "செங்கோட்டை முதல் ரெய்ஸினா' என்ற தலைப்பில் தில்லியின் பாரம்பரியத்தைத் தத்துரூபமாக வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகின்றன. வரும் 24-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

ஷாஜஹானா பாத்: முகலாய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட செங்கோட்டைக்குள் ஷாஜஹானாபாத் நகரம் அமைந்திருந்தது. இதில் இரண்டு அடுக்கு மாடிகளில் வீடுகள் இருந்தன. பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்ததும் "பாதுகாப்பான தில்லி'யை அமைப்போம் என்று செங்கோட்டை அருகே 500 கஜ தூரத்தில் அமைந்திருந்த வீடுகள் அனைத்தையும் இடித்தனர். ஹாஜஹானாபாத்தை இடிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. செங்கோட்டைக்கு அருகே உள்ள சாந்தினி சௌக்கில் மனிதர்கள் நிற்க கூட இடம் இல்லாத நிலையே தற்போது உள்ளது. ஆனால் அன்றைய தினத்தில் இருபுறமும் அகண்ட திண்ணைகளுடன் சாலைக்கு நடுவே மரங்களுடன் காணப்படும் புகைப்படங்களை ஆர்வத்துடன் மக்கள் பார்த்து வருகிறார்கள்.

செங்கோட்டை அருகே ரயில்: 1622 ஆம் ஆண்டு காலத்தில் காஜியாபாத், சலீம் கர்கில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் சேவை இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ரயில் இயக்கப்பட்ட ஜஹாங்கிர் பாலம் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தைக் கட்டும் புகைப்படம். கட்டுமான பணிகளுக்காக நாடாளுமன்றத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள ரயில் தடம் ஆகியவை காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன. 1911 ஆம் ஆண்டு தீஸ் ஹசாரி பகுதியில் இயக்கப்பட்ட ரயில் சேவை. அதில் 250 பேர் பயணம் செய்வது, இந்தியா கேட் அடிக்கல் நாட்டு விழா, நார்த் பிளாக், சௌத் பிளாக் ஆகிய பகுதிகளின் அடிக்கல் நாட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

முகலாய காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை தில்லியின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இந்த புகைப்படக் கண்காட்சியைக் காண்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக கட்டடவியல் நிபுணர் சுபாஷ் சக்கரவர்த்தி தெரிவித்தார். தனது 70 ஆண்டு வாழ்நாளை தில்லியில் கழித்துவிட்ட போதிலும் இந்த அரியவகை புகைப்படங்களை இதுவரை கண்டதில்லை என்றும் இந்த புகைப்பட கண்காட்சியை இளைஞர்கள் கண்டிப்பாகக் காண வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.