முகப்பு
புதுதில்லி

தில்லி தமிழ் மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு: பிரதமரிடம் வலியுறுத்தப்படும்: மத்திய இணையமைச்சர் நாராயணசாமி

புது தில்லி, ஜூன் 28: தில்லியில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தில்லி கல்லூரிகளில் சேர தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்படும், இதற்காக மன்மோகன் சிங்கை விரைவில் சந்திக்க உள்ளதாக மத்தி

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:00 PM
பகிர்:

புது தில்லி, ஜூன் 28: தில்லியில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தில்லி கல்லூரிகளில் சேர தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்படும், இதற்காக மன்மோகன் சிங்கை விரைவில் சந்திக்க உள்ளதாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

 தில்லி தமிழ் மாணவர்களுக்கு தனிக் கல்லூரி தொடங்குவதற்கு தில்லி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் ஷீலா தீட்சித்திடம் முறையிட உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

 தில்லி கல்லூரிகளில் இப்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சிறந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு கட்-ஆப் மதிப்பெண் 100 சதவீதத்தில் இருந்து ஆரம்பித்தது. இப்போது மூன்றாவது பட்டியல் கட்-ஆப் மதிப்பெண்னும் 95 சதவீதத்துக்கு கீழே குறையவில்லை.

 தில்லி தமிழ்க் கல்விக் கழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சராசரியாக 60- 70 சதவீதம் மதிப்பெண்கள் பெறுகிறார்கள். இதனால் அவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. வசதியுள்ள பெற்றோர்கள், மாணவர்களை உயர்படிப்புகளுக்காக தமிழகத்துக்கு அனுப்புகிறார்கள். மாணவிகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதை தவிர்க்கும் சில பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஓராண்டு பட்டயப் படிப்புகளை படிக்க வைக்கிறார்கள்.

 இது தொடர்பான செய்தி, "தில்லி தமிழ் மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் பட்டப்படிப்புகள்' என்ற தலைப்பில் தினமணியில் வெளியானது.

 இது குறித்து தினமணி செய்தியாளருக்கு நாராயணசாமி அளித்த பேட்டி:

 பணி, வணிகம் ஆகியவை காரணமாக தில்லியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 1986 ஆம் ஆண்டில் தமிழ் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் இருந்தது தொடர்பான பிரச்னை என்னிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது எம்.பி.யாக இருந்த நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்.

 தில்லி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள மிராண்டா இல்லம், வெங்கடேஸ்வரா, தயாள் சிங், லேடி ஸ்ரீராம் ஆகிய நான்கு கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படும் என்று யு.ஜி.சி. உத்தரவாதம் அளித்தது.

 ஆனால் இப்போது ஒரு கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று செய்தியில் படித்தேன்.

 தில்லியில் இன்று மக்கள்தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இருப்பினும் 1986 ஆம் ஆண்டுகளில் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடம்தான் இன்றும் வழங்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.

 தில்லியில் இப்போது சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு பட்டப்படிப்புகள் வழங்க தில்லியில் போதிய கல்லூரிகள் இல்லை. ஆகையால் தில்லியில் வாழும் தமிழர்களின் மக்கள்தொகையின் அடிப்படையில் தில்லி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் தமிழ் மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை அடுத்த வாரத்தில் சந்தித்து வலியுறுத்தயுள்ளேன். அனைத்து மாணவர்களுக்கும் தில்லியிலேயே பட்டப்படிப்புகள் பயில ஏதுவாக குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழர்களின் இந்தப் பிரச்னை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் கொண்டு செல்லப்படும்.

 அதேபோல் தில்லித் தமிழ் கல்விக் கழக பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான மயூர்விஹார் நிலப்பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த பிரச்னை முடிந்தவுடன் தமிழர்களுக்கு தனிக் கல்லூரி தொடங்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கோரிக்கை வைக்கப்படும்.

 பொறியியல் கல்லூரி: இது மட்டும் இன்றி மோத்திபாக்கில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக பள்ளிகளை ஒன்றாக இணைத்து பொறியியல் கல்லூரி தொடங்க தில்லி தமிழ் கல்விக் கழக பள்ளி நிர்வாகமும் தில்லி தமிழ் சங்கமும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக என்னால் முடிந்த அளவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

 தில்லி தமிழர்கள் கல்வி உரிமைப் பெற அனைத்து தில்லி தமிழ் சங்கம், தமிழர் அமைப்புகள் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.