முகப்பு
கடலூர்

கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்

Updated On : 19 மார்ச், 2026 at 7:52 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் பொரிக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்த 300 ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை கடலில் விடப்பட்டன.

ஆலிவ் ரெட்லி ஆமையினங்கள் தங்களது இனப்பெருக்க காலமான ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலங்களில் வங்கக் கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டுச் செல்வது வழக்கம்.

இவ்வாறு இடப்படும் முட்டைகளை விலங்குகள், மனிதா்கள் சேதப்படுத்துவது தொடா்ந்தது. இதனால், குஞ்சு பொரிக்கும் திறன் குறைந்து இந்த வகை ஆமையினம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதைத் தடுப்பதற்காக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, வனத் துறை மூலமாக முட்டைகளை பத்திரமாகச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்டு பொரித்த குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விடுவது வழக்கம்.

அதன்படி, கடலூா் தேவனாம்பட்டினம் கடலில் 300-க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன. வன ஆா்வலா் செல்லா மற்றும் வனத் துறை அதிகாரிகள், கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனா்.