3 மாத சிகிச்சைக்குப் பின் கடலில் விடப்பட்ட ஆமை! என்ன நேர்ந்தது?
3 மாத சிகிச்சைக்குப் பின் கடலில் விடப்பட்ட ஆமை நலத்துடன் நீச்சலடித்து சென்றது.
சென்னை, நீலங்கரை கடற்கரையில் கடந்த ஜனவரி மாதம் கரை ஒதுங்கிய, மிக அருகிவரும் இனத்தைச் சேர்ந்த காயமடைந்த ஹாக்ஸ்பில் என்ற குட்டி ஆமை ஒன்று மீட்கப்பட்டு, தொடர் சிகிச்சைக்குப் பின் தற்போது கடலில் விடப்பட்டுள்ளது.
படுகாயத்துடன் கரை ஒதுங்கிய ஆமைக்கு, மேம்பட்ட கால்நடை மருத்துவப் பராமரிப்பு மற்றும் அதன் வாழ்விடத் தன்மையிலேயே கவனத்துடன் அளிக்கப்பட்ட கிச்சைக்குப் பிறகு, நலம் பெற்றதால், அண்மையில் மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவிலிருந்து மீண்டும் கடலில் விடப்பட்டது.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி ஒரு குட்டி ஆமையானது, பலவீனமான நிலையில் கரை ஒதுங்கியிருந்தது. அதை மீண்டும் தண்ணீருக்குள் விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது மீண்டும் மீண்டும் கரைக்கு அடித்து வரப்பட்டது. பின்னர், வனத்துறை அதிகாரிகள், கால்நடைத் துறை மருத்துவர்களின் உதவியோடு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
Advertisement
Advertisement
சிகிச்சையின் போதுதான், ஒரு ஆமையானது, உயிர்வாழ்வதற்கான முக்கிய திறன், நீரில் மூழ்குவது மற்றும் நீச்சலடிப்பது போன்றவை. ஆனால், அந்த திறன் ஆமைக்கு இல்லை என்பதை மருத்துவ நிபுணர்கள் கவனித்தனர்.
ஒரு சிடி ஸ்கேன் பரிசோதனையில், அதன் இடது நுரையீரல் மடல்கள் சுருங்கியிருப்பதும் தெரியவந்தது. இது நியூமோசீலோம் என்ற நிலைக்கு வழிவகுத்தது. இது மிதப்புத்தன்மையை சிக்கலாக்கும் நிலை. உடனடியாக ஆமைக்கும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சிறப்புப் பராமரிப்புடன் இணைந்து, எடை சிகிச்சை முறை அளிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையின் பயனாக மூன்று மாதங்களில், அந்த ஆமை படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது. தொடர் சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் செயல்பாடு சீரடைந்து, இயல்பான மூழ்கும் திறன் கிடைத்தது. பூரண குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
அந்த ஆமை இனத்தின் குறிப்பிட்ட சூழலியல் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் அதை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்தனர். நீர்ச்சத்து குறைவதைத் தடுப்பதற்காக, பல அடுக்குகளில் ஈரமான பருத்திப் பஞ்சு மற்றும் ஒரு ஈரமான, உலர்வது தடுக்கும் பெட்டிக்குள் வைத்து, வனவிலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் மூலம் அந்த ஆமை சாலை வழியாகக் கொண்டு செல்லப்பட்டது.
மன்னார் வளைகுடாப் பூங்காவில் உள்ள கரியச்சள்ளித் தீவுக்கு அருகில் ஆமை விடுவிக்கப்பட்டது. இங்கு மீன்பிடி பணிகள் நடைபெறாது என்பதால், ஆமைக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்று கணிக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாஹு மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா தெரிவித்துள்ளனர்.
கடலில் விடப்பட்ட இளம் ஹாக்ஸ்பில் ஆமை, முதலில், வனத்துறையினரால் அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்புக்குள் சுமார் ஒரு மணி நேரம் நீந்துவதற்கு பழக்கப்படுத்தப்பட்டது. பின்னர் அது அமைதியாக அந்த அடைப்பிடத்தை விட்டு வெளியேறி, வேகமாக கடலுக்குள் நீந்திச் சென்றதை மகிழ்ச்சியோடு பார்த்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.