FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

5 மாத குழந்தையுடன் கொஞ்சல்... 19 வயது இளைஞனுடன் மோதல்!

'விதியின் விளையாட்டு' என்ற வார்த்தையை பொதுவாக நாம் பயன்படுத்துவோம். ஆனால், விளையாட்டிலேயே அந்த விதி விளையாடும் ஒரு சுவாரஸ்யமான தருணம் நிகழவிருக்கிறது.

Updated On : 18 ஜூலை 2026, 7:59 am IST
பகிர்:

'விதியின் விளையாட்டு' என்ற வார்த்தையை பொதுவாக நாம் பயன்படுத்துவோம். ஆனால், விளையாட்டிலேயே அந்த விதி விளையாடும் ஒரு சுவாரஸ்யமான தருணம் நிகழவிருக்கிறது. இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா - ஸ்பெயின் மோதும்போது அது அரங்கேறுகிறது.

குறிப்பாக, ஆர்ஜென்டீன கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸியும், ஸ்பெயின் இளம் கால்பந்து நட்சத்திரம் லேமின் யமாலும் நேருக்கு நேர் மோதுவதே அந்தத் துல்லிய தருணமாகும். 39 வயதான மெஸ்ஸியுடன் அன்று களத்தில் மோதப்போகும் 19 வயதான யமால், மிகச் சரியாக 19 ஆண்டுகளுக்கு முன் மெஸ்ஸி கையில் குழந்தையாகத் தவழ்ந்தவர் என்பது தான் அந்த சுவாரஸ்யம்.

ஆண்டு 2007. ஸ்பெயினில் இருக்கும் காடலோனியாவுக்கு அப்போது குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தில் 5 மாத குழந்தையாக இருந்தவர் லேமின் யமால். அங்கு வெளியான ஒரு விளையாட்டு நாளேடும், பார்சிலோனா அணியும் இணைந்து நடத்திய குலுக்கல் பரிசில் யமாலின் பெற்றோரும் வெற்றி பெற்றனர்.

Advertisement

Advertisement

வென்றவர்கள் அனைவரின் குழந்தைகளுமே, பார்சிலோனா அணியின் ஏதேனும் ஒரு வீரருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான 'யுனிசெஃப்' நிதி திரட்டுவதற்காக, அந்தப் புகைப்படத்துடன் நாள்காட்டி அச்சிடுவது தான் திட்டம்.

அந்த வகையில், 5 மாத குழந்தையான லேமின் யமால் புகைப்படம் எடுத்துக்கொள்ள, அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வீரர், 20 வயது லயனல் மெஸ்ஸி. அப்போது அவர் பார்சிலோனா அணியில் பிரபலமாகியிருந்த தருணம்.

பார்சிலோனாவின் கேம்ப் நோவு மைதானத்தில் உள்ள ஒரு அறையில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படமே தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வலம் வருகிறது.

'ஏஐ' போலிகள் எளிதாக ஏமாற்றும் இந்தக் காலத்தில், அதன் உண்மைத்தன்மை தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், தங்களின் திட்டத்துக்காக எடுக்கப்பட்டதே அந்தப் புகைப்படம் என யுனிசெஃப் அமைப்பே அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்தது. அத்துடன், தற்போதும் இருவருமே யுனிசெஃப் நல்லெண்ண தூதர்களாகச் செயல்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

'பிறரிடம் பேசுவதற்கு மிகவும் தயக்குமுடையவராக இருந்த மெஸ்ஸி, அந்த புகைப்படம் எடுக்கும் தருணத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றார். 5 மாத குழந்தையான யமால் மிகவும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு, யமாலின் தாயார் ஷீலாவின் உதவியுடன் மெஸ்ஸி யமாலுடன் இணக்கமாக இருக்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்தோம்' என்று அந்த புகைப்படத்தை எடுத்த ஜோன் மான்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments